திருவாரூரில், வெள்ளரி விற்பனை மும்முரம்

திருவாரூரில், வெள்ளரி விற்பனை மும்முரம்

Update: 2023-02-24 18:45 GMT

சீசன் தொடங்கியதால் திருவாரூரில் வெள்ளரி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் 1 கிலோ வெள்ளரி ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோடைக்காலம்

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னிநட்சத்திரம் மே மாதம் தொடங்குகிறது. வழக்கமாக அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது பிப்ரவரி மாதத்திலேயே வெயில் சுட்டெரித்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே திருவாரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. மக்களும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இளநீர், நுங்கு, வெள்ளரி, குளிர்பானம் போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

வெள்ளரி விற்பனை மும்முரம்

இதனால் சாலையோரங்களில் தற்காலிக கடைகளில் நுங்கு மற்றும் இளநீர், வெள்ளரி விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. வெயிலின் தாக்கம் காரணமாக திருவாரூரில் பல இடங்களில் வெள்ளரி பிஞ்சு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கிலோ வெள்ளரி ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை ஆகிறது. 1 பிஞ்சு ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது.

அதேபோல கிர்ணி, பப்பாளி, தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியூட்டும் பழங்களும் அதிகம் விற்பனை ஆகின்றன. இதனால் நகரின் சாலையோரங்களில் ஆங்காங்கே ஜூஸ் கடைகளும், பழச்சாறு கடைகளும் காணப்படுகின்றன.

இதுகுறித்து வியாபாாிகள் கூறுகையில், சுவையானது மட்டுமில்லாமல் கோடைக் காலத்திற்கு மனித உடலுக்கு தேவையான நீர்ச்சத்தினை அளிக்கின்றது. கோடைக்காலத்தில் தண்ணீர் தேவைக்கு மக்கள் தேடுவது வெள்ளரி பிஞ்சு தான். இதனால் பொதுமக்களும் ஆர்வத்துடன் வெள்ளரி பிஞ்சுகளை வாங்கி செல்கிறார்கள் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்