எடப்பாடியில் அரசு நிலத்தில் குடியேற முயன்றவர்களால் பரபரப்பு

எடப்பாடியில் அரசு நிலத்தில் குடியேற முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-15 22:14 GMT

எடப்பாடி:

அரசு நிலம்

எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட கவுண்டம்பட்டி, சக்தி நகர், இந்த பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி, மரகதம், சரசு, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை ஆய்வு செய்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர். சம்பந்தப்பட்ட குடும்பங்களை அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டதுடன், அவர்களுக்கு அரசு சார்பில் பழைய எடப்பாடி பகுதியில் இலவச வீட்டுமனைகள் வழங்கினர்.

அரசு உத்தரவினை ஏற்று சக்தி நகர் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தவர்கள், அரசு ஒதுக்கீடு செய்த புதிய மனை பிரிவில் அண்மையில் குடியேறினர். அங்கு வீடு கட்டி வசித்து வந்த அவர்கள் திடீரென நேற்று காலை சக்தி நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை புதுப்பித்து, மீண்டும் அவர்கள் குடியேற முயன்றனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு வழித்தட பிரச்சினை இருப்பதாக கூறி, சம்பந்தப்பட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த எடப்பாடி போலீசார், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலத்தில் ஏற்கனவே குடியிருந்தவர்கள், அங்கு மீண்டும் குடிேயறக்கூடாது எனவும், அரசு ஒதுக்கீடு செய்த புதிய நிலத்தில் தொடர்ந்து வசிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டு அங்கிருந்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்