அரசியல் பேசினால் ஜாக்கிரதையாக பேச வேண்டும் - ரஜினிகாந்த்

தேர்தல் வெற்றிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆளுமையை காட்டுகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Update: 2024-08-24 14:58 GMT

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் அமைச்சர் எ.வ.வேலு புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தொடர்ந்து 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:-

அமைச்சர் எ.வ.வேலு புத்தகத்திற்கு அருமையான தலைப்பு வைத்திருக்கிறார். முதல்-அமைச்சரின் கையில் புத்தகத்தை பெற்றது பெருமை அளிக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி புத்தகம் மட்டுமல்ல, திரைப்படமும் வர வேண்டும். அரசியல் பேசினால் ஜாக்கிரதையாக பேச வேண்டும். அறிவார்ந்தோரின் சபையில் பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம். ஆனால், தற்போது பேசித்தான் ஆக வேண்டும். எதை பேசவேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்பது முக்கியமானது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் வெற்றிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆளுமையை காட்டுகிறது. ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம். அதை சிறப்பாக செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். பள்ளியில் புதிய மாணவர்களை விட, பழைய மாணவர்களை சமாளிப்பது கடினம். தி.மு.க.வில் பழைய தலைவர்களை முதல்-அமைச்சர் சிறப்பாக சமாளித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்