வேலூரில் சாரல் மழை

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. அதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-11-02 17:00 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், பொன்னை உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான முதல் பலத்த மழை நேற்று முன்தினம் பெய்தது. வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை மிதமான வேகத்தில் சாரல் மழை பெய்தது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 முதல் நேற்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக அம்முண்டியில் 25.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத்தவிர மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பொன்னை- 16.2, குடியாத்தம்- 13, வேலூர்- 12.2, மேல்ஆலத்தூர்- 11.8, காட்பாடி- 9.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் மழை தொடர்ந்து பெய்தது. அதிகாலையில் சிறிதுநேரம் பலத்த மழை பெய்தது. அதன்காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். இதன்காரணமாக பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூர் நகரில் நாள் முழுவதும் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் பொதுமக்கள் குடை மற்றும் மழைகோட் அணிந்தபடி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்