மதுரை ஐகோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை

மதுரை ஐகோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

Update: 2023-04-10 20:40 GMT


கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்த பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

அதன்படி சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் நேற்று (10-ந் தேதி) முதல் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்து உள்ளது.

நேரடியாக வழக்குகள் விசாரணை நடந்தாலும், வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள், பொதுநல வழக்குகளை தொடுத்து நேரடியாக ஆஜராகபவர்கள் உள்ளிட்டவர்கள் முடிந்தவரை கொரோனா தொற்றை தடுக்கும் வகையிலும், கோர்ட்டு அறைகளில் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் வீடியோ கான்பரன்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு பதிவுத்துறை கேட்டுக் கொண்டு உள்ளது.

அதே போல வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு பதிவுத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி நேற்று முதல் மதுரை ஐகோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் முறையிலும் வழக்குகள் விசாரணை நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்