"பணியில் உள்ள போலீசார் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும்" - எஸ்.பி. அதிரடி உத்தரவு

பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-09-04 14:26 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நேற்று பெண் டி.எஸ்.பி. காயத்ரியை போராட்டக்காரர்கள் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் போலீசாருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான உத்தரவில், இன்று முதல் இந்த நொடியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாரும் கையில் லத்தி இல்லாமல் இருக்கக்கூடாது. பாதுகாப்புப் பணிக்கு வரும்போது கையில் லத்தி இல்லாமல் யாரையாவது பணியில் பார்த்தால் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுவர். பிரச்சனை நடைபெறும் இடத்தில் வெறும் கையோடு பேசுவதற்கும், கையில் லத்தியோடு பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக அடிதடி போன்ற இடங்களில் வாயில் பேசிக் கொண்டிருந்தால் சரியாகவே இருக்காது கையில் லத்தி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக பீட் போலீஸ், பந்தோபஸ்த் போலீஸ், பணியில் இருக்கும் எல்லா போலீசும் நான் பார்க்கும்போது கையில் லத்தி இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது. இதுவே முதலும் கடைசியும் ஆக இருக்க வேண்டும். ஆகையால் அனைத்து டி.எஸ்.பி.யும் ரோல் காலில் கட்டாயம் லத்திக் கொண்டு வருவதற்குப் போலீசை அறிவுறுத்த வேண்டும். சீருடையில் இருசக்கர வாகனத்தில் செல்கின்ற போலீஸ் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து தான் செல்ல வேண்டும். நானே சாலையில் போகும்போது தலைக்கவசம் இல்லாமல் யாரையாவது சாலையில் பார்த்தால் அவர்களுக்கு உடனே வித்தவுட் தலைக்கவசம் பைன் விதிக்கப்படும். டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் எப்பொழுதும் அலர்ட் ஆகவும் தயாராகவும் இருக்க வேண்டும். டி.எஸ்.பி. அனைவரும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது கட்டாயம் காரில் ஒரு போலீஸ் வைத்திருக்க வேண்டும்" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்