கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-01 11:28 GMT

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதல் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கவர்னர் தெரிவித்திருக்கிறார். அக்கடிதத்தில், அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு உண்டு என்று கவர்னர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டிருக்கிறார்.

கவர்னர் குறிப்பிட்டு இருக்கிற சட்டப்பிரிவுகளின் கீழ் வானளாவிய அதிகாரம் எதுவும் கவர்னருக்கு வழங்கப்படவில்லை. கவர்னர் ஆர்.என்.ரவி, அரசியல் சட்ட பிரிவுகளை துணைக்கு அழைத்து, தன்னிச்சையாக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தமக்கு இருப்பதாக கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. முதல்-அமைச்சரின் பரிந்துரையின்றி கவர்னர் எப்படி ஒரு அமைச்சரை நியமிக்க முடியாதோ? அதைப்போலவே தன்னிச்சையாக நீக்கவும் முடியாது என்பது தெளிவாகிறது.

அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளையும் மரபுகளையும் தொடர்ந்து மீறிவரும் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் கவர்னராக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் விளைவிக்க முனைந்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்