கல்லூரி உதவி பேராசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு

கல்லூரி உதவி பேராசிரியையிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-23 19:15 GMT

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி 2-வது வீதியை சேர்ந்தவர் சேவியர் பெனிடிக். இவருடைய மனைவி பேபி நிர்மலா (வயது 50). இவர் திருச்சியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு பொன்மலை ஜி-கார்னர் வழியாக தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் பேபிநிர்மலாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தனர். அப்போது, பேபிநிர்மலா சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொள்ளவே, சங்கிலி இரு துண்டுகளாக அறுந்தது. மர்ம நபர்கள் கையில் 1 பவுன் சங்கிலி துண்டு மட்டும் சிக்கியது. 2 பவுன் சங்கிலி துண்டு தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியையிடம் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்