கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-18 00:19 GMT

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உயர் அலுவலர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்பாட்டில் உள்ளதை, மக்களிடையே பிரபலப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவின் உதவி போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் 'வாட்ஸ் அப்' எண்களை அறிவித்து, அதன் மூலம் பெறப்படும் புகார்களை கூடுதல் டி.ஜி.பி. (மதுவிலக்கு அமலாக்கம்) கண்காணித்து உடனுக்குடன் எடுக்கும் தொடர் நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், இது தொடர்பான அறிக்கையை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை உள்துறை செயலாளர் மூலம் முதல்-அமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொண்டார்.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் காவல் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) மாவட்ட மேலாளர் ஆகியோரை கொண்டு நடத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

பொதுமக்களிடையே கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தொழிற்சாலைகளில் எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணித்து, அது விஷ சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதை, காவல் துறை மற்றும் உதவி ஆணையர் (கலால்) கண்காணித்திட வேண்டும் என்றும், மாநிலத்தின் எல்லை பகுதி, கடலோர மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில், மாவட்ட அளவிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாக செயல்படும் உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்த தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அரசின் பல்வேறு வாழ்வாதார திட்டங்கள் மூலம் பயன்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு மாதமும், உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. தலைமையில் காவல் கண்காணிப்பாளர்களின் மாதாந்திர கூட்டம் நடத்தப்பட்டு, காவல் துறையின் செயல்பாடுகளை கண்காணித்து, முதல்-அமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அளித்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

காவல் துறை அலுவலர்கள், தங்களது முழு திறமையையும், நீண்ட அனுபவத்தையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) சங்கர், மதுவிலக்கு அமலாக்கத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் மதிவாணன், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்