சம்பா சாகுபடிக்காக கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அமைச்சர் எ.வ. வேலு பங்கேற்பு

சம்பா சாகுபடிக்காக கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

Update: 2022-10-02 18:45 GMT

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. 46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீரை சேமித்து வைத்து ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில மாதங்களில் கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கல்படை, பொட்டியம், மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு தண்ணீர் வந்தது. அவ்வாறு வந்த தண்ணீர் கோமுகி அனையில் 44 அடிவரை சேமித்து வைக்கப்பட்டது. இநத நிலையில் தற்போது சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுவதால் பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பாசனத்திற்காக கோமுகி அணையில் இருந்து திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ.க்கள் சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாசன வசதி

சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு கோமுகி அணையில் இருந்து பழைய பாசன வாய்க்கால் வழியாக 55 கனஅடியும், புதிய பாசன வாய்க்கால் வழியாக 55 கனஅடி தண்ணீரையும் திறந்து வைத்தார். இதன் மூலம் சுமார் 10 ஆயிரத்து 860 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்