ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-30 18:38 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமை தாங்கினார். பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த ஆண்டு பெய்த அதிகப்படியான மழையால் அழிந்துவிட்ட நெற்பயிர்களுக்கும், மற்ற பயிர்களுக்கும் இதுவரை கிடைக்காத பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். ஆறு, வாய்க்கால், ஏரிகளில் சாக்கடை நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள கூட்டுறவு வங்கியின் தலைவர்கள் சிலர் விவசாயிகளுக்கு கட்சி பாகுபாடு பார்த்து கடன் தரமறுக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களையும், வடிகால் வாய்க்கால்களையும் தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்