அணை, குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை

களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் அணை, குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

Update: 2022-11-21 20:58 GMT

களக்காடு:

களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் அணை, குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழையால் ஆறு, குளங்கள், அணைகள் நிரம்பும் தருவாயில் இருக்கிறது.

ஆனால் நெல்லை மாவட்டம் களக்காடு, திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இதுவரை சரிவர பெய்யவில்லை. அவ்வவ்போது பெய்த மழையால் பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், நம்பியாறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. மழை தீவிரமடையாததால் ஆறுகளில் குறைந்தளவு தண்ணீரே செல்கிறது. இதனால் குளங்கள் நிரம்பவில்லை.

நிரம்பாத வடக்கு பச்சையாறு அணை

மேலும் திருக்குறுங்குடி பெரியகுளம், கோவிலம்மாள்புரம் குளம், சாலைப்புதூர் குளம், பத்மநேரி குளம் உள்பட 100-க்கும் மேற்பட்ட குளங்கள் இன்னும் நிரம்பவில்லை.

இதேபோல் களக்காடு வடக்கு பச்சையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டவில்லை. மழை இல்லாததால் அணையின் நீர்மட்டமும் உயராமலேயே உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி ஆகும். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 14 அடியாகவே உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை.

வடக்குபச்சையாறு அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள 110 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. அணை நிரம்பாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாய பணிகளை தொடங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

காத்திருக்கும் விவசாயிகள்

மலையடிவார பகுதியில் உள்ள ஒரு சில குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளதால், அப்பகுதியில் மட்டுமே விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் மட்டுமே அணைகளும், குளங்களும் நிரம்பும் என்பதால் களக்காடு பகுதி விவசாயிகள் கனமழையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்