விவசாயி எரித்து கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

கரூர் அருகே தோட்டத்தில் விவசாயி எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-08 18:59 GMT

விவசாயி கொலை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், ராசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 72). இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை கருப்பண்ணன் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கருப்பண்ணன் கால்கள் கட்டப்பட்டு தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கருப்பண்ணன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணங்களில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்நிலையில் கருப்பண்ணன் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் காந்திகிராமத்தில் உள்ள கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து கருப்பண்ணனின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்-திருச்சி சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்