தொழிற்பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்

மயிலாடுதுறையில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

Update: 2022-09-08 18:00 GMT

மயிலாடுதுறையில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

இதுகுறித்துமாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிற்பழகுநர் பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மயிலாடுதுறை ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

சான்றிதழ்

மேலும் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழில் பழகுநராக சேர்ந்து 3 முதல் 6 மாதகால அடிப்படைப்பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7 ஆயிரம் முதல் நிறுவனத்தால் வழங்கப்படும்.

வேலை வாய்ப்பில் முன்னுரிமை

இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிப்புரிந்திட பயனுள்ளதாக அமையும்.இந்த வாய்ப்பினை மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குனர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை (பொ) தொலை பேசி எண்:04364-278222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்