போக்குவரத்து ஊழியர்களை கூட்டுறவு சங்க கடன் பெற முடியாத நிலைக்கு தி.மு.க. அரசு தள்ளியுள்ளது - ஓ.பி.எஸ் கண்டனம்

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை கூட்டுறவு சங்க கடன் கூட பெற முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு தி.மு.க. அரசுக்கு தள்ளியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2024-09-12 16:45 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சாலை மார்க்கமான பயணிகள் போக்குவரத்தினை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவைகளாக அரசுப் போக்குவரத்து கழகங்கள் உள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை லாபத்துடனும், சிறப்பாகவும் செயல்படுத்துவது உறுதிப்படுத்தப்படும்; மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் போன்ற வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இந்த வாக்குறுதிகள் எதுவும் கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.

மாறாக, ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. ஓய்வு காலப் பயன்களான பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி போன்றவற்றையே இரண்டு ஆண்டு காலம் கழித்து பெறக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்னும் முடிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தின்மூலம் கடன்கூட பெற முடியாத அவல நிலைக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் தங்கள் அவசர தேவைக்கு மேற்படி கடன் சங்கத்திலிருந்து பணம் பெற்றுக் கொண்டு வந்தனர்.

தற்போது, உறுப்பினர்களுக்கு கடன் வழங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், இதற்கான காரணம், போக்குவரத்து கழகங்கள் உறுப்பினர்களின் கடனுக்கான தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்து அதனை போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்திற்கு செலுத்தாததுதான் என்று கூறப்படுகிறது. அதாவது அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையான 22 கோடி ரூபாயினை போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்திற்கு அரசு போக்குவரத்து கழகங்கள் செலுத்தவில்லை. இதன் காரணமாக, மத்திய கூட்டுறவு வங்கியிலும் கடன் பெற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை பெற நீதிமன்றத்தை நாடும் சூழ்நிலை போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடமிருந்து பிடித்த கடன் தொகையை போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்திற்கு அளிக்காதது சட்டத்திற்கு புறம்பான செயல் ஆகும். தனியார் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய பொதுத்துறை நிறுவனமே இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.

போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தின் மூலம் அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் கடன் பெற வசதியாக, தொழிலாளர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட 22 கோடி ரூபாயினை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தி.மு.க அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்