இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் தி.மு.க.-அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம்

வாணியம்பாடி அருகே இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் தி.மு.க.-அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-01 18:02 GMT

வாணியம்பாடி அருகே இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் தி.மு.க.-அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சைக்கிள் வழங்கும் விழா

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லகுண்டா ஊராட்சியில் உள்ள தாசிரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்றார்.

அவர் செல்வதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பக்கத்து தொகுதியான ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான க.தேவராஜ் வந்து மேடைக்கு சென்று விழா நடத்துவதற்கான பணியில் ஈடுபட்டார். இந்த நிலையில் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் மேடை அருகே சென்றார்.

எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம்

அப்போது, ஏற்கனவே திட்டமிட்டபடி அவசர அவசரமாக விழாவை தொடங்க சொன்னதால் செந்தில்குமார் எம்.எல்.ஏ. வெளியிலேயே நின்றிருந்தார். பின்னர் மேடைக்கு சென்று அங்கிருந்து தி.மு.க. எம்.எல்.ஏ. தேவராஜ் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார் ஆகியோரிடம், தனது தொகுதியில் தேவையில்லாமல் மற்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எப்படி கலந்து கொள்ளலாம்?.

இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும்போது, பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ. வந்து, என் தொகுதியில் சைக்கிள் கொடுப்பது சரியா? எனக்கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செந்தில்குமார் எம்.எல்.ஏ.வை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சமாதானம் செய்ய முற்பட்டார்.

புறக்கணிப்பு

இருப்பினும் மாணவ, மாணவிகளுக்கு பிரச்சினை இன்றி விழா நடப்பதற்காக நான் இங்கு இருந்து வெளியேறுகிறேன் என கூறிவிட்டு, நேரடியாக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று அங்கு அமர்ந்தார்.

அதன் பின்னர் 5 நிமிடத்தில் 111 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. தேவராஜ் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் மாணிக்கத்திடம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. என்னுடைய தொகுதியில் எப்படி வேறு தொகுதி எம்.எல்.ஏ.வை அழைத்து வந்து விழா நடத்தலாம், நான் உள்ளே வரும்போது வேண்டும் என்றே விழாவை தொடங்கியது சரியா? என்று தலைமை ஆசிரியரிடமும், அங்கிருந்த அதிகாரிகளிடமும் கேட்டார்.

அதே அறையில் இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலருக்கும், தலைமை ஆசிரியருக்கும் விழா குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அங்கு இருந்தவர்கள் சமரசம் செய்தனர்.

சைக்கிள் வழங்கும் விழா மேடையில் தி.மு.க.-அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்