கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

தொடர்விடுமுறையைெயாட்டி நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் திரண்டு உற்சாகமாக பொழுதை போக்கினர்.

Update: 2022-10-08 22:20 GMT

நாகர்கோவில், அக்.9-

தொடர்விடுமுறையைெயாட்டி நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் திரண்டு உற்சாகமாக பொழுதை போக்கினர்.

தொடர் விடுமுறை

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அங்கு வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும்.

அதன்படி பள்ளி காலாண்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்தநிலையில் சனிக்கிழமையான நேற்று கன்னியாகுமரியில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

பின்னர் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர். மேலும் மாலையில் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பொழுதை போக்கினர். கடலின் இதமான காற்றை அனுபவித்தனர்.

திற்பரப்பு அருவி...

இதேபோல் அங்குள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா ஆகிய இடங்களிலும் கூட்டம் அலைமோதியது.

தற்போது திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் விழுகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியலிட்டு மகிழ்ந்ததோடு, அதன் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்தும் உற்சாகமடைந்தனர்.

பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலத்தையும் ஏராளமானோர் ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்