உம்பளச்சேரி இன காளை மாடுகள் கண்காட்சி

துளசாபுரத்தில் உம்பளச்சேரி இன காளை மாடுகள் கண்காட்சியை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-22 19:15 GMT

துளசாபுரத்தில் உம்பளச்சேரி இன காளை மாடுகள் கண்காட்சியை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

உள்நாட்டு காளை இனங்கள்

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உள்நாட்டு இன கால்நடைகள் பாதுகாத்தல் மற்றும் இன விருத்தி குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் உம்பளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உப்பளப்புல் எனும் ஒரு வகை புல் பிரசித்திப் பெற்றவையாகும். இந்த புற்களில் உப்புச்சத்து அதிகமாக இருக்கும். இந்த புல்வகையை மேய்வதால் உம்பளச்சேரி இன மாடுகள் சிறந்த மாடு இனமாக திகழ்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

உம்பளச்சேரி மாடு இனங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பரவலாக காணப்படுகின்றன. உம்பளச்சேரி எருதுகள் சேறு நிறைந்த சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.

இவற்றின் குறைந்த உடல் எடையும், மெல்லிய ஆனால் வலுவலான கால்களும் சேற்றில் எளிதாக நடப்பதற்கு உதவி புரிகின்றன. சேற்று உழவில் மற்ற இன மாடுகளை விட இந்த மாட்டு இனம் வேகமாக வேலை செய்யும் திறன் கொண்டது. கடுமையான மழை மற்றும் வெயில் என எந்த பருவ சூழலையும் தாங்கி, நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாக உம்பளச்சேரி மாட்டு இனம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பாக மாடு, கன்று பராமரித்து வரும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர்கள் ஹசன் இப்ராஹிம், விஜயகுமார், தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்