பெரிய வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மும்முரம்

பெரிய வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மும்முரம்

Update: 2023-04-30 18:45 GMT

நீடாமங்கலம் அருகே பெரிய வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சாலை பணிகள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் கோவில்வெண்ணி என்ற இடத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நான்கு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையான திருச்சியில் இருந்து தஞ்சை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. நிதி பற்றாக்குறை காரணமாக நான்கு வழிச்சாலை தஞ்சை முதல் நாகப்பட்டினம் வரை இருவழிச்சாலையாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனாலும் பணிகள் சற்று தாமதமாக நடந்து வந்தது. தற்போது மீண்டும் சாலை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பாலம் கட்டும் பணி மும்முரம்

நீடாமங்கலம் அருகில் உள்ள கோவில்வெண்ணி என்ற இடத்திலிருந்து வயல் பகுதியில் நார்த்தாங்குடி, அபிவிருதீஸ்வரம், ஊர்குடி வழியாக இந்த சாலை நாகப்பட்டினம் வரை செல்கிறது. நீடாமங்கலம் அருகே பன்னிமங்கலம்−குருவாடி கிராமத்தை இணைக்கும் பெரிய வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.

இந்த பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தளவாட பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல வெண்ணாற்றில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் கோவில்வெண்ணியிலிருந்து கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்கிறது. நார்த்தாங்குடி, நரிக்குடி, ஆலங்குடி, மாணிக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றும் அம்மாப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி சிறிய வாகனங்களில் செல்பவர்கள் இந்த சாலையில் சென்று வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் குறையும்

இதேபோல் அபிவிருதீஸ்வரம், ஊர்குடி பாலம் கட்டும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மூன்று பாலங்களும் விரைவில் கட்டி முடிக்கப்பட உள்ளது. இந்த பாலங்கள் கட்டும் பணிகள் முடிவடைந்தால் கனரக வாகனங்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநில சுற்றுலா பயணிகள் நேரடியாக சாலையில் சென்று விடுவார்கள். இதனால் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். 

Tags:    

மேலும் செய்திகள்