மாநகராட்சி நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி பெற அனுமதி இல்லை

மாநகராட்சி நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி பெற அனுமதி இல்லை என்று மாநகராட்சி வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Update: 2023-04-15 07:55 GMT

கோடை விடுமுறையையொட்டி நீச்சல் குளங்களில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். சென்னை பெரியமேட்டில் உள்ள மை லேடி பூங்காவில் நீச்சல் பயிற்சி பெற்ற 7 வயது சிறுவன் தேஜா குப்தா, சில தினங்களுக்கு முன்பு நீரில் மூழ்கி பலியானான். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் 8 புதிய விதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, 8 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகள் நீச்சல் குளத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். 8 வயதில் இருந்து 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் கண்காணிப்பிலேயே அனுமதிக்கப்படவேண்டும். பொதுமக்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் நீச்சல் குள விதிகளை உள்ளடக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்கள் நீச்சல் குள வளாகத்தில் ஒட்டப்படவேண்டும்.

பயிற்சி பெறுபவர்கள் வலிப்பு நோய், இருதய மற்றும் சுவாசக்கோளாறு, தோல் நோய்கள், பாலுறவு நோய்கள் மற்றும் பிற தொற்று நோய்கள் இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பயிற்சியாளர்கள் மற்றும் உயிர் காக்கும் 2 வீரர்கள் முன்னிலையில் ஒரு மணி நேரத்துக்கு 15 முதல் 20 குழந்தைகள் மட்டுமே நீச்சல் குளத்தில் அனுமதிக்கப்படவேண்டும். பராமரிப்பு பணிக்காக அல்லது வேறு ஏதாவது காரணங்களால் நீச்சல் குளம் மூடப்பட்டால் மாநகராட்சியிடம் கண்டிப்பாக தகவல் தெரிவிக்கவேண்டும். நீச்சல் குளத்தில் பயிற்சி பெறுவதற்கு எழுத்துப்பூர்வமான இசைவினை பெற்றோரிடம் இருந்து பெறவேண்டும். அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் இடம் பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 3 நீச்சல் குளங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கு புதிய விதிகள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தின் ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மண்டல அதிகாரிகள் புதிய விதிகள் நீச்சல் குளங்களில் அமல்படுத்தப்படுகிறதா? என்று கண்காணிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்