கட்டிலில் இருந்து விழுந்து குழந்தை சாவு; துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை

கட்டிலில் இருந்து விழுந்து குழந்தை சாவு; துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-10 19:18 GMT

கீழப்பழுவூர்:

குழந்தை சாவு

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சியை சேர்ந்தவர் தினேஷ்(வயது 26). இவர் அரியலூரில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 வயதில் விக்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் மாலை வீட்டில் குழந்தையுடன் திவ்யா தனியாக இருந்தார்.

அப்போது குழந்தை விக்ஷன் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக திவ்யா, தினேஷிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் குழந்தையை திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

சிலிண்டரை திறந்து...

இதையடுத்து திவ்யா சரியாக கவனிக்காததால்தான் தனது குழந்தை இறந்தது என்று கூறி தினேஷ் கதறி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து தினேசின் தாய்மாமாவான பழனிசாமி, தினேைஷ அழைத்துச்சென்று வெற்றியூரில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அங்கு குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தினேஷ் தவித்துள்ளார். இதனால் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த அவர், தனது கையில் தாமிர கம்பியை சுற்றிக்கொண்டு, சுவிட்ச் பாக்சில் கை வைத்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், நேற்று காலை தினேஷ் ஏற்கனவே வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு, தீ வைத்துக்கொள்ள முயன்றுள்ளார். அது தோல்வியில் முடிந்த நிலையில், அவர் சுவிட்ச் பாக்சில் கை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்