சென்னை: தப்பியோட முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

சென்னையில் தப்பியோட முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

Update: 2024-08-13 02:39 GMT

சென்னை,

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரோகித் ராஜ். சரித்தப்பதிவேடு குற்றவாளியான இவர் மீது மயிலாப்பூர் ரவுடி சிவக்குமார் கொலை உள்பட 3 கொலைவழக்குகள் உள்ளன. மேலும், அடிதடி, மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி ரோகித் ராஜ் தேனியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சென்னை போலீசார் தேனி சென்று அங்கு பதுங்கி இருந்த ரோகித்தை கடந்த 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி ரோகித் சென்னை அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில், சென்னை அழைத்து வரப்பட்ட ரவுடி ரோகித்தை குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இடங்களுக்கு போலீசார் இன்று அதிகாலை அழைத்து சென்று வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். சேத்துப்பட்டு பகுதியில் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது ரவுடி ரோகித் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.

இதையடுத்து, தப்பியோட முயன்ற ரவுடி ரோகித்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காலில் காயமடைந்த ரோகித் ராஜை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்