நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை நிதிநிலை அறிக்கை தந்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2024-07-23 12:54 GMT

சென்னை,

2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதராமன் தாக்கல் செய்தார். அவரது உரையில், தமிழ் வார்த்தையும் தமிழ்நாடு என்பதும் இடம்பெறாமலேயே ஒட்டுமொத்த உரையும் வாசித்து முடிக்கப்பட்டுள்ளது. பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி உள்ளிட்ட பல அதிரடி அறிவிப்புகள் இடம்பெற்ற நிலையில் தமிழகத்திற்கு என எந்த சிறப்பு திட்டங்களும் இல்லை என விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்தநிலையில், மத்திய பட்ஜெட் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை நிதிநிலை அறிக்கை தந்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. தமிழக அரசு பரிந்துரைத்த எந்த திட்டங்களையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் குறித்து எந்த சிந்தனையும் பா.ஜனதா அரசுக்கு இல்லை என்பதையே பட்ஜெட் காட்டுகிறது. 2 மிகப்பெரிய பேரிடரை சந்தித்த தமிழகத்திற்கு இதுவரை போதிய வெள்ள நிவாரணம் தரப்படவில்லை.

தமிழகத்திற்கு திட்டத்தை அறிவிக்காததால் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன். தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை தி.மு.க. எம்.பி.,க்கள் மற்றும் கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்த உள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்