வேங்கைவயல் விவகாரம்: டி.என்.ஏ. பரிசோதனை நடத்த 4 சிறுவர்கள் சம்மதம்

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டி.என்.ஏ. பரிசோதனை நடத்த 4 சிறுவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, விசாரணை 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Update: 2023-07-14 18:30 GMT

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 4 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்பு நேற்று மீண்டும் வந்தது. சிறுவர்கள் 4 பேரும், அவர்களது பெற்றோரும் கோர்ட்டில் ஆஜராகியிருந்தனர். சிறுவர்கள் தரப்பில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மனு மீதான விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். அன்றைய தினம் சிறுவர்கள் 4 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்