தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரருக்கு தங்க கவசம் அணிவிப்பு-சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர்.

Update: 2023-04-14 18:45 GMT

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி தினமும் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் சித்திரை மாதம் 1-ம் நாளான நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தமிழ் புத்தாண்டையட்டி மூலவருக்கும், சம்பந்த விநாயகருக்கும் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

பஞ்சாங்கம் வாசிப்பு

மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கப்படி பால் பெருக்கு நிகழ்ச்சியும், 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்ததல் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கத்தை வாசித்து இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி கோவிலில் நகரத்தார் சார்பில் கோவில் வளாகத்தில் தங்க தேர் இழுக்கப்பட்டது. இதில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்தார். மேலும் கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தாிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விடிய விடிய கிரிவலம்

தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று இரவு வரை பக்தர்கள் பலர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்