தர்மபுரியில்மோட்டார் சைக்கிள் திருடிய தொழிலாளி கைது

Update: 2023-08-26 19:00 GMT

தர்மபுரி மாவட்டம் பந்தார அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 25). இவர் தர்மபுரி- பென்னாகரம் சாலையில் மாவு மில் அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தார். அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் மாயமானது. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானசேகர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டார். அதில் பனந்தோப்பு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (36) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்