வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா?

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை சர்வதேச நிதி அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு இந்த யோசனையை அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

Update: 2022-11-27 18:45 GMT

பிரதமர் மோடி அதிரடி

'மத்திய அரசு பணிகளில் 18 மாதங்களில் 10 லட்சம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள்' என்று அப்போது பிரதமர் மோடி அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி ரெயில்வே துறையில் 2 லட்சத்து 93 ஆயிரம், பாதுகாப்புத்துறையில் 2 லட்சத்து 63 ஆயிரம், உள்துறையில் 1 லட்சத்து 43 ஆயிரம், தபால்துறையில் 90 ஆயிரம், வருவாய்த்துறையில் 80 ஆயிரம், கணக்கு தணிக்கைத் துறையில் 26 ஆயிரம், சுரங்கத்துறையில் 7 ஆயிரம், அணுசக்தி துறையில் 9 ஆயிரத்து 400, நீர்வளத்துறையில் 3 ஆயிரத்து 800 என மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி., ரெயில்வே தேர்வு வாரியம் போன்றவைகள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக கடந்த 22-ந் தேதி அன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் முகாமையும் அவர் தொடங்கி வைத்தார்.

மு.க.ஸ்டாலினின் பெருமிதம்

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பில் அதிக அக்கறை காட்டி வருகிறது. பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன.

தமிழக போலீஸ்துறையில் 3 ஆயிரத்து 552 போலீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது.

படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் பணியை தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மட்டும் 419 முகாம்கள் நடத்தப்பட்டு 68 ஆயிரத்து 14 பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் கடந்த மாதம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசும்போது, 'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது' என்று பெருமிதத்துடன் கூறினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விரைவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறதா? வேலை வாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா? என்பவை பற்றி பட்டதாரிகளும், வேலைதேடும் இளைஞர்களும் வெளிப்படுத்திய கருத்துகளைப் பார்ப்போம்.

வரவேற்கத்தக்கது

பெரம்பலூர் அருகே எசனையை சேர்ந்த அன்புசெல்வம்:- நான் பி.எஸ்.சி. (கணிதம்) பி.எட் படித்து முடித்துள்ளேன். மத்திய-மாநில அரசு அளிக்கும் வேலை வாய்ப்புகள் ஓரளவுக்கு தான் மகிழ்ச்சி அளிக்கிறது. பட்டதாரி இளைஞர்கள் பலர் தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைகளை செய்யவில்லை. அவர்கள் கிடைத்த வேலைகளை செய்து வருகின்றனர். தற்போது தான் மத்திய-மாநில அரசுகள் வேலை வாய்ப்புக்கு நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி

எறையசமுத்திரத்தை சேர்ந்த கார்த்திக்:- நான் மெக்கானிக்கல் என்ஜீனியர் படித்துள்ளேன். படித்த படிப்பிற்கு சரியான வேலை கிடைக்காததால் தற்போது சொந்த தொழில் செய்து வருகிறேன். முன்பெல்லாம் அரசின் போட்டி தேர்வுகள் நடைபெறுவது குறித்து அனைவருக்கும் தெரியாது. அந்தந்த பணிகளில் உள்ளவர்களின் தெரியவரும். தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் அரசின் போட்டித்தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிட்ட மறுவினாடியே அறிந்து விட முடிகிறது. அரசு வேலைகளுக்கு தற்போது பலர் போட்டி போடுகின்றனர். சாதாரண அரசு வேலைக்கு கூட, அதற்கான கல்வி தகுதிக்கு மேல் படித்த பட்டதாரிகள் நிறைய பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் உடனடியாக நிரப்பிட அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.டி. துறையிலும்...

மத்திய-மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கங்கள் முனைப்பு காட்டி வருவது படித்த இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டால் அரசு துறைகளில் சுணக்கம் குறைந்து பணிகள் வேகம் எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் பிறந்துள்ளது.

கொரோனாவால் ஆட்டம் கண்ட தனியார் துறையும் தற்போது ஆட்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. ஐ.டி. துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் அறிவித்திருப்பது என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்