எந்தவொரு பிரச்சினைக்கும் சமரசமாக பேசினால் தீர்வு ஏற்படும் -நீதிபதி பேச்சு

எந்தவொரு பிரச்சினைக்கும் சமரசமாக பேசினால் தீர்வு ஏற்படும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் நீதிபதி கூறினார்.

Update: 2023-05-13 18:45 GMT


எந்தவொரு பிரச்சினைக்கும் சமரசமாக பேசினால் தீர்வு ஏற்படும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் நீதிபதி கூறினார்.

லோக் அதாலத்

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார். முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், மகளிர் விரைவு விசாரணை நீதிபதி கோபிநாத், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஷ்வரன், நீதித்துறை நடுவர் நீதிபதிகள் பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி விஜயா பேசியதாவது:-

லோக் அதாலத் நிகழ்வில் தீர்வு காணப்படும் வழக்குகளில் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது. இருதரப்பினருக்கும் வெற்றி, தோல்வி என்ற நிலை இருக்காது. கோர்ட்டு கட்டணம் திருப்பி தரப்படும். இதுபோன்ற லோக் அதாலத் நிகழ்வினை வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் பயன்படுத்தி சமரச தீர்வு மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

விட்டு கொடுக்க வேண்டும்

வழக்காடிகளும், வழக்கறிஞர்களும் இதுபோன்ற சமரச தீர்வு முறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எந்த ஒரு பிரச்சினையும் கையை மீறி போகும்போது சமரசம் செய்து வைக்க கூடிய இதுபோன்ற நிகழ்வினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். எந்த ஒருபிரச்சினைக்கும் யார்விட்டு கொடுப்பது என்ற ஈகோ தான் பிரச்சினை பெரிதாவதற்கு காரணம். இருதரப்பினரும் பேசிக்கொண்டே இருந்தால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது. இதுபோன்ற சமரச தீர்வு மூலம் இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனநிலை உருவாகும்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வழக்குகளை பார்த்து கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்து மாறி லோக் அதாலத் மூலம் சமரசம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் பேசினால் தீர்வு ஏற்படும். அதனை உணர்ந்து இதுபோன்ற சமரச தீர்வு நிகழ்வுகளில் பொதுமக்கள் தங்களின் வழக்குகளை தீர்த்து சமாதானமாக செல்லலாம்.

இவ்வாறு பேசினார்.

தீர்வு

நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நடைபெற்ற இந்த லோக் அதாலத் நிகழ்வில் மொத்தம் 2 ஆயிரத்து 44 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 907 வழக்குகளில் சமரச தீர்வு மூலம் முடிவு காணப்பட்டு ரூ.6 கோடியே 30 லட்சத்து 87 ஆயிரத்து 276 மதிப்பில் தீர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வக்கீல் சங்க தலைவர் சேக் இப்ராகிம் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்