கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது நீக்க நிதி ஒதுக்கீடு

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது நீக்க நிதி ஒதுக்கீடு

Update: 2023-08-13 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், புனரமைத்தல் பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மானிய தொகை உயர்வு

தமிழ்நாட்டில் சொந்தக்கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகையை உயர்த்தியும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி, குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளலாம்.

தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம் வருமாறு:-

தல ஆய்வு மேற்கொள்ளப்படும்

10 முதல் 15 ஆண்டு வரை இருப்பின் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 முதல் 20 ஆண்டு வரை இருப்பின் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை தல ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்