அழகர்கோவில் மலைப்பாதையில் இறந்து கிடந்த மூதாட்டி - கொலையா? போலீசார் விசாரணை

அழகர்கோவில் மலைப்பாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-03 01:11 GMT

புதூர், 

அழகர்கோவில் மலைப்பாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காயங்களுடன் மூதாட்டியின் உடல்

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலைப்பாதையில் கரும்பாறை கன்னிமார்கோவில் அருகே நேற்று முன்தினம் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் வலையப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி மதன்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் ஊமச்சிக்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், அப்பன் திருப்பதி இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டாரா?

மேலும் சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி மதன்குமார் கொடுத்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்து கிடந்த மூதாட்டி யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது போலீசாருக்கு தெரியவில்லை. எனவே போலீசார் அவர் கொலை செய்யப்பட்டாரா?, நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு இடத்தில் அவரை கொலை செய்து விட்டு இங்கு வந்து அவரது உடலை வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரபடுத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்