முன்னாள் அமைச்சர் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலைமறியல்

முன்னாள் அமைச்சர் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-03 05:10 GMT

கடலூர்,

அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத்திடம் ராமச்சந்திரன் என்பவரது மருமகன் குமார் என்பவர் அரசியல் உதவியாளராக இருந்து வந்துள்ளார். அவர், சம்பத்திடம் வாங்கிய பணத்தை அதிமுகவினரும், சம்பத்தின் உறவினரும் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனால், ராமச்சந்திரன் காயமடைந்த நிலையில், அவர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 8 பிரிவின் கீழ் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குறிப்பாக சம்பத், அவரது சகோதரர் தங்கமணி, மேறும் 12 பேர் என மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பொய் வழக்கு என நேற்று அவர்கள் தெரிவித்து வந்த நிலையில், இதனை கண்டித்து கடலூர் பிரதான சாலையில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வழக்கை வாபஸ் பெறக்கோரி பிரதான சாலையை மறித்து போராட்டம் நடைபெறுவதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும், ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் கைதுநடவடிக்கை மேற்கொள்ள முயன்று வருகின்றனர். ஆனால், அவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிறைந்து கானப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்