அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர் சோ்க்கை நடைபெறுவதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

Update: 2023-06-09 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், 4 இணை சீருடைகள் புத்தகப்பை, வண்ண பென்சில்கள், காலணிகள், கிரையான்ஸ், நிலவரைபடம், கணித உபகரணப்பெட்டி, பஸ் பயண அட்டை வழங்கப்படுகிறது. மேலும் கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை, தூய்மைப்பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, திறனறிவுத்தேர்வு ஊக்கத்தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ முகாம்கள், பள்ளியுடன் இலவசமாக தங்கும் வசதி போன்றவைகளுடன் உண்டு உறைவிட பள்ளிகளில் சலுகைகள் வழங்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-2024-ம் கல்வியாண்டில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 28 ஆரம்பப்பள்ளிகள், 12 நடுநிலைப்பள்ளிகள், 2 உயர்நிலைப்பள்ளிகள், 4 மேல்நிலைப்பள்ளிகள் ஆகிய உண்டு உறைவிடப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளிகளில் பழங்குடியின மாணவ, மாணவிகள் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் சங்கராபுரம் தாலுகாவில் 2 பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் ஒரு தொழிற்பயிற்சி விடுதியில் ஐ.டி.ஐ மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்