வயலில் வேலை செய்த விவசாயி மின்சாரம் பாய்ந்து பலி

வயலில் வேலை செய்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

Update: 2022-09-22 21:09 GMT

விவசாயி

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த தாராநல்லூர் கிராமத்தை ேசர்ந்தவர் பிச்சை(வயது 55). விவசாயியான இவருக்கு திருமணமாகி தங்கமணி என்ற மனைவியும், 3 மகள்களும், ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர்.

லால்குடியை அடுத்த திருமங்கலம் கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பிச்சை விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வயலில் நாற்றங்கால் செப்பனிடும் பணியில் பிச்சை ஈடுபட்டார்.

மின்சாரம் பாய்ந்து சாவு

அப்போது, அந்த வயலில் மின்மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ள மின்வயர் எலி கடித்திருந்ததில் சேதமடைந்திருந்ததாக தெரிகிறது. இதையறியாமல் அந்த மின்வயரில் கால் வைத்தபோது பிச்சை மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அங்கு சென்று, பிச்சையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்