தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த வழக்கு:சேலம் வாலிபர் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த வழக்கில் கைதான சேலம் வாலிபர் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2023-01-21 19:45 GMT

சேலம், 

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆசிக் (வயது 25). இவர் சேலம் கோட்டை அருகே உள்ள சின்னசாமி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத இயக்கத்துடன் சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரை கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் அவரை சேலம் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைதான ஆசிக்கிடம் இருந்து பாகிஸ்தான் கொடி, கத்தி, பென்டிரைவ், செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

சேலத்தில் விசாரணை

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆசிக்கிற்கு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரை மீண்டும் கோர்ட்டில் சரண் அடைய உத்தரவிட்டுள்ளது. அவர் விரைவில் கோர்ட்டில் சரண் அடைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் ஆசிக் வசித்து வந்த பகுதியில் உள்ள மக்களிடம் அவருடைய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்