ஜல்லிக்கட்டில் 750 காளைகள் சீறிப்பாய்ந்தன

க.புதுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 750 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 16 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-05-19 19:14 GMT

பொன்னமராவதி:

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே க.புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர்.

அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், நத்தம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 750 ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

பரிசு

காளைகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்ைச அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் சைக்கிள், ஹோம் தியேட்டர், மிக்சி, குக்கர், அண்டா, நாற்காலி, கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், நத்தம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை க.புதுப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்