மூதாட்டியிடம் நகை பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை

கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியிடம் நகையை பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது

Update: 2023-03-07 18:45 GMT

விழுப்புரம்

மூதாட்டியை மிரட்டி நகை பறிப்பு

விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே உள்ள அரும்புலி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி சின்னக்குழந்தை(வயது 75). இவர் கடந்த 24.8.2020 அன்று அதே கிராமத்தில் உள்ள ஒரு தைல மர தோப்பில் விவசாய கூலி வேலையில் ஈடுபட்டிருந்தார்.

அந்த சமயத்தில் அங்கு குடிபோதையில் வந்த சூரப்பட்டு அண்ணா நகரை சேர்ந்த தேவராஜ்(50) என்பவர் சின்னக்குழந்தை அணிந்திருந்த மூக்குத்தியை பறிக்க முயன்றார். இதனால் அவர் கூச்சலிட முயன்றார். உடனே தேவராஜ், சின்னக்குழந்தையை நெட்டி கீழே தள்ளியதோடு கத்தியால் குத்தி விடுவேன் என மிரட்டி அவர் அணிந்திருந்த 2 கிராம் எடையுள்ள மூக்குத்திகளை பறித்துச்சென்று விட்டார்.

7 ஆண்டு சிறை

இதுகுறித்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றம் எண் 2-ல் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரபாண்டியன், குற்றம் சாட்டப்பட்ட தேவராஜிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஷெரீப் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்