போலீஸ் ஜீப் மோதி கார் உள்பட 7 வாகனங்கள் சேதம் - சென்னையில் போதை போலீஸ்காரர் கைது

சென்னையில் போலீஸ் ஜீப் மோதி கார் உள்பட 7 வாகனங்கள் சேதமடைந்தன. போதையில் இருந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-08 10:09 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆவலூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்பவர் ஸ்ரீதர். இவர் நேற்று தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளிக்கு செல்வதற்காக போலீஸ் ஜீப்பில் சென்றுக்கொண்டிருந்தார். விருகம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட அவரது போலீஸ் ஜீப், அசோக்நகர் பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. தாறுமாறாக ஓடிய அந்த போலீஸ் ஜீப் 5 மோட்டார் சைக்கிள்கள், ஒரு சைக்கிள் மற்றும் ஒரு கார் மீது அடுத்தடுத்து மோதியது. அந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.

ஸ்ரீதர் உடன், அவரது நண்பர் இன்னொரு போலீஸ்காரர் அருள்மணியும் சென்றுள்ளார். அவர்கள் 2 பேரையும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், போலீஸ்காரர் ஸ்ரீதர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

மேற்கண்ட தகவல் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்