கோவிலில் திருட்டு போன 7 சாமி சிலைகள் மீட்பு; போலி சாமியார் கைது

சேலம் அருகே தாரமங்கலத்தில் கோவிலில் திருட்டு போன 7 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-28 22:42 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊர்ச்சாவடி அருகே உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மடத்தில் வைக்கப்பட்டு இருந்த 7 சாமி சிலைகள் காணாமல் போய் இருப்பது கடந்த 21-ந் தேதி தெரியவந்தது.

இரவு நேரத்தில் கோவிலில் காவலாளிகள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அங்குள்ள அறையின் கதவு பூட்டை உடைத்து 7 சாமி சிலைகளை திருடி சென்றுள்ளனர். ஆனால் கருடாழ்வார் சிலை மட்டும் தப்பியது.

போலி சாமியார் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தாரமங்கலம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சாமி சிலைகளை திருடிய நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று பார்வையிட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், சாமி சிலைகளை திருடியது நங்கவள்ளி அருகே உள்ள பெரியசோரகை கிராமம் குள்ளானூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 50) என்பதும், அவர் போலி சாமியாராக சுற்றித்திரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 7 சாமி சிலைகளையும் மீட்டனர்.

பரபரப்பு வாக்குமூலம்

சாமி சிலைகளை திருடியது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணையில் சக்திவேல் கூறிய வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் திருமணம் முடிந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தேன். இதனால் திருமண வாழ்க்கையில் வெறுப்பு அடைந்ததால் ஆன்மிக பணியில் ஈடுபாடு கொண்டு சாமியாராக மாறினேன். கடந்த 18 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள எனது வீட்டில் பல்வேறு சாமி உருவ சிலைகளை வைத்து அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பூஜைகள் செய்து வந்தேன். மேலும், பில்லி, சூனியம், மாந்திரிகம் மற்றும் குழந்தைபேறு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறியதால் பொதுமக்கள் என்னிடம் வந்து அருள்வாக்கு பெற்று சென்றனர்.

ஆண்களுக்கு ஆண்மை சக்தி பெறவும், ஆண்மை சக்தி இழக்கவும் பூஜைகள் செய்து வருமானம் பெற்று வந்துள்ளேன். மேலும் நான் இந்த பகுதியில் ஒரு கோவில் கட்ட திட்டமிட்டு வந்தேன். அதற்கு பணம் திரட்ட ஏதாவது கோவில் சிலைகளை திருட பல்வேறு இடங்களில் நோட்டமிட்டு வந்தேன்.

இந்த நேரத்தில் தான் பெருமாள் கோவிலுக்கு வந்து பகல் வேளையில் படுத்து ஓய்வு எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். சம்பவத்தன்று நள்ளிரவு கோவிலுக்குள் நுழைந்து 7 சாமி சிலைகளையும் எடுத்து சென்று என்னுடைய வீட்டில் பதுக்கி வைத்து இருந்தேன். ஆனால் போலீசார் வீட்டிற்கு வந்து என்னை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்