சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 512 வழக்குகளுக்கு தீர்வு

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 512 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-07-08 18:23 GMT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஜெயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி நடந்த இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை அரியலூரில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவின்படி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கர்ணன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் நீதித்துறை நடுவர் அறிவு ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர். மேலும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மனோகரன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் லதா, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேசன் மற்றும் நீதித்துறை நடுவர் ராஜசேகரன் மற்றும் வழக்கறிஞர் வேல்முருகன் ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர். செந்துறையில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் ஆக்னேஸ் ஜெபகிருபா மற்றும் பாலு ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர். இதில் 1,238 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதில், மொத்தம் 512 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே4 லட்சத்து 11 ஆயிரத்து 910-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான அழகேசன் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அலுவலர்கள் செய்திருந்தனர். அரசு வக்கீல்கள், போலீசார், அரசு அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்