சாலை விபத்தில் சிக்கி 3 பேர் படுகாயம்

சாலை விபத்தில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-10 18:41 GMT

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 25). நாமக்கல் காவேட்டிபட்டியை சேர்ந்தவா் கார்த்திக் (27). கட்டிட தொழிலாளிகளான 2 பேரும், ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு கட்டிட வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சேமங்கி பெரியார் நகர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது, பரமத்தி வேலூரில் இருந்து கொடுமுடி நோக்கி நாமக்கல் கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நவீன்குமார், கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்து கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் லாரி டிரைவர் சங்கர் மீது வழக்குப்பதிந்து, அந்த லாரியும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சென்னை திருமங்கலம் நவஜீவன் பிளாட் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (65). இவர் கரூர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது மகள் ஆர்த்தி வீட்டிற்கு வந்திருந்தார். இந்தநிலையில் சொந்த வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் கரூர் -நொய்யல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னால் சென்ற லாரி எந்த சிக்னலும் செய்யாமல் திடீரென நின்றது. இதனால் குமாரசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமாரசாமி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்