திருவள்ளூர் அருகே லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-08 11:15 GMT

திருவள்ளூர் பத்தியால் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 22). இவர் கடந்த 5-ந்தேதி பனப்பாக்கத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து 23 டன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூரை அடுத்த ஐவேலி அகரம் பகுதியிலுள்ள தனியார் ரைஸ்மில்லுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஐவேலி அகரம் சுடுகாடு அருகே வரும்போது, அந்தப்பகுதியில் பதுங்கியிருந்த 3 பேர் திடீரென லாரியை வழிமறித்தனர். அவர்கள் ஆனந்தனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணைக்குப் பிறகு டிரைவர் ஆனந்தனை வழிமடக்கி பணத்தை பறித்த திருவள்ளூர், வள்ளுவர்புரம் பகுதியைச்சேர்ந்த இளவரசன் (வயது 22), ஈக்காடு செங்குன்றம் சாலையைச் சேர்ந்த யுவராஜ் என்ற சாம் (24) திருவள்ளூரை அடுத்த வீரராகவபுரம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கி (23) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்