கடலூர் மாவட்டத்தில் ரூ.255 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் ரூ.255 கோடியில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-12-19 12:29 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின் (CGF) கீழ் ரூ.255.64 கோடி மதிப்பீட்டிலான அண்ணாமலை நகர் பேரூராட்சி கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் பரங்கிபேட்டை, நகராட்சி, குமாராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் பரங்கிபேட்டை, குமராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த கணக்கரப்பட்டு, கவரப்பட்டு, நக்கரவந்தன்குடி, டி.எஸ்.பேட்டை, ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலாபாடி, பெராம்பட்டு, சிவபுரி மற்றும் வரகூர் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு புதிதாக அமைக்கப்படவுள்ள 2 நீர் சேகரிப்பு கிணறுகள் மூலம் 2,078 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளுடன் கூடிய கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் ரூ.255.64 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் 14.12.2022-ல் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ரூத் 2.0 மற்றும் மூலதன மானிய நிதியின்கீழ் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், சுமார் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறுவர். மேலும், நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 90 லிட்டர் வீதமும் மற்றும் ஊரக பகுதிகளில் 55 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்