தொழிலாளிக்கு 21 ஆண்டுகள் ஜெயில்

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 21 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-06-27 18:52 GMT

பள்ளி மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மேல்புதுப்பாக்கம் கிராமம், பழைய காலனி ஆலமர தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 51) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டில் 14 வயதுடைய பள்ளி மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பள்ளி மாணவி கர்ப்பமானார்.

இதையடுத்து வேலூர் அரசு மருத்துவமனையில் அந்த மாணவி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதுதொடர்பாக மருத்துவமனை டாக்டர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெருமாள் மீது புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

21 ஆண்டுகள் ஜெயில்

இது தொடர்பான வழக்கு வேலூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி கலைப்பொன்னி விசாரித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் சந்தியா ஆஜராகி வாதாடினார்.

பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (நேற்று) வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் பெருமாள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்