குமரி கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலை தொடர்ந்து தற்போது இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

Update: 2018-12-24 22:45 GMT
சென்னை,

இந்த நிலையில் தாழ்வு நிலை அப்படியே நீடிப்பதால் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை துறையினர் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

கன்னியாகுமரிக்கு தெற்கு குமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) தென்மாவட்டங்களில் பரவலாக ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 30 டிகிரியும், குறைந்தபட்சமாக 23 டிகிரியும் வெப்பம் பதிவாகும். அதேபோல் வடகிழக்கு திசையில் இருந்து 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலமான காற்று வீசும். நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணிநேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரி, செய்யூர், மரக்காணம், சீர்காழி, மகாபலிபுரம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ அளவில் மழை பதிவானது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்