மேகதாதுவில் அணை கட்ட தமிழக பாரதீய ஜனதா கட்சியும் ஒப்புக்கொள்ளாது; தமிழிசை சவுந்தரராஜன்

மேகதாதுவில் அணை கட்ட தமிழக பாரதீய ஜனதா கட்சியும் ஒப்புக்கொள்ளாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Update: 2018-11-27 10:31 GMT
சென்னை,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து அதற்கான வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்தது.  இதற்காக மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது.  இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், இறுதி அறிக்கைக்கு கர்நாடகா ஒப்புதல் பெறுவதை தடுப்பதற்காக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட வழங்கப்பட்ட பூர்வாங்க அனுமதியை எதிர்த்து பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  இந்த அணையால் காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, மேகதாதுவில் அணை கட்ட தமிழக பாரதீய ஜனதா கட்சியும் ஒப்புக்கொள்ளாது.  மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மட்டுமே நீர்வள ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

ஆனால் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விஷயத்தை பல்வேறு விஷயங்களுடன் இணைத்து வைகோ பீதி ஏற்படுத்துகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்