அ.தி.மு.க.வில் தினகரனையும், சசிகலாவையும் சேர்க்கும் பேச்சுக்கே இடம் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அ.தி.மு.க.வில் சசிகலாவையும், தினகரனையும் சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2018-10-06 23:39 GMT
சென்னை,

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் குறிப்பிட்டது போல, துணைவேந்தர்கள் பணம் கொடுத்து நியமனம் பெற்று இருந்தால், அவர்கள் மீது வித்தியாசம் எதுவும் பார்க்காமல், திறந்த மனதோடு நடவடிக்கை எடுக்க எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. அவர்களும் சட்டத்துக்குட்பட்டவர்கள் தான்.

கவர்னர் கூறியதில் உண்மை இருக்கலாம். வெளி உலகத்துக்கு குற்றம் செய்தவர்கள் யார்? என்று தெரிய வரும்போது அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும். கவர்னர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

கவர்னர் ஒரு நிர்வாகத்தின் தலைவர். மாநிலத்தில் நிகழ்கிற சூழ்நிலைகள் குறித்து அவ்வப்போது முதல்-அமைச்சர் நேரில் சென்று விவரிப்பது வழக்கம். அந்த அடிப்படையிலும், தமிழகத்துக்கு விடுக்கப்பட்டு இருந்த ‘ரெட் அலர்ட்’ குறித்தும் விளக்கி கூறினார். அவர்களுடைய சந்திப்பு நிர்வாக சந்திப்பு தான். அரசியல் உள்நோக்கம் இல்லை.

தினகரனையோ, சசிகலாவையோ அவர்களை சார்ந்தவர்களையோ மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எதிர்காலத்தில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும். அவரை நாங்கள் அழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. அது நடக்காத ஒன்று. டி.டி.வி.தினகரன் பின்னால் 2 சதவீதம் பேர் தான் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்