அரசு வேலைக்காக நேர்முகத்தேர்வில் பங்கேற்றதற்காக பணி நியமனம் கோர முடியாது சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு வேலைக்காக நேர்முகத்தேர்வில் பங்கேற்றதற்காக பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-11-25 21:45 GMT
சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படித்த ராஜேஷ் என்பவருக்கு அழைப்பு கடிதம் வந்தது.

நேர்முகத்தேர்வில் பங்கேற்ற அவருக்கு பணி நியமன உத்தரவு எதுவும் வரவில்லை. இதனால் தனக்கு பணி நியமன உத்தரவு வழங்க மின்வாரிய தலைமை என்ஜினீயருக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:-

உரிமை கோர முடியாது

மனுதாரர் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட போதிலும் அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருக்கு கடிதம் அனுப்பப்படாது. அப்படி இருக்கும்போது நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட தனக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.

நேர்முகத்தேர்வில் பங்கேற்றதற்காக பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்