பக்தர் தவறி விழுந்து சாவு எதிரொலி: தலைமலையில் கிரிவலம் செல்வதை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடு

கிரிவலம் சென்ற பக்தர் தவறி விழுந்து இறந்ததன் எதிரொலியாக தலைமலையில் கிரிவலம் செல்வதை தடுக்க கோவில் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய இருக்கிறது.

Update: 2017-10-17 20:45 GMT
தா.பேட்டை,

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே 4,500 அடி உயரம் கொண்ட தலைமலையில் சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அப்போது அவர்கள் மலையின் உச்சியில் உள்ள பெருமாள் கோவிலை சுற்றி 2 அங்குல விளிம்பில் சுவரை பிடித்துக்கொண்டு ஆபத்தான முறையில் கிரிவலம் செல்வார்கள்.

இந்நிலையில் புரட்டாசியையொட்டி 14-ந் தேதி கோவிலை சுற்றி கிரிவலம் வந்த போது முசிறியை சேர்ந்த ஆறுமுகம் தவறி விழுந்து இறந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர் நந்தகோபன் கூறுகையில், “தலைமலை கோவிலில் கிரிவலம் செல்ல தடைவிதித்து ஏற்கனவே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பக்தர்கள் சிலர் கிரிவலம் செல்கின்றனர். எனவே கோவிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் இருக்க இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்