அமைச்சர் பொன்முடி மீதானசெம்மண் குவாரி வழக்கில் மேலும் 2 பேர் பிறழ் சாட்சியம்

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் 2 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

Update: 2023-08-29 18:45 GMT

செம்மண் குவாரி வழக்கு

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

2 பேர் பிறழ் சாட்சியம்

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை.

மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் நேற்று பூத்துறை கிராம உதவியாளர் ரமேஷ், முன்னாள் கிராம உதவியாளர் கோபாலகண்ணன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை முன்னாள் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அப்போது, செம்மண் குவாரியில் தணிக்கை செய்தது தொடர்பாகவும், இவ்வழக்கு சம்பந்தமாகவும் தங்களுக்கு எதுவும் தெரியாது என ரமேஷ், கோபாலகண்ணன் ஆகிய இருவரும் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தனர். பின்னர் அவர்களிடம் அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் குறுக்கு விசாரணை செய்தார். அவரை தொடர்ந்து எதிர்தரப்பு வக்கீல் ஆனந்தநாராயணன் குறுக்கு விசாரணை செய்தார்.

இன்று மீண்டும் விசாரணை

தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கு விசாரணை மீண்டும் நாளை (அதாவது இன்று) நடைபெறும் என நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். ஏற்கனவே இவ்வழக்கில் அரசு தரப்பின் முதல் சாட்சியான ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன், 2-ம் சாட்சியான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன் ஆகிய இருவரும் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்திருந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் இவ்வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்