தொழிலதிபர் வீட்டில் 18 பவுன் நகை- ரூ.1½ லட்சம் கொள்ளை

தொழிலதிபர் வீட்டில் 18 பவுன் நகை- ரூ.1½ லட்சம் கொள்ளைபோனது.

Update: 2023-01-29 20:27 GMT

கொள்ளிடம் டோல்கேட்:

நகை-பணம் கொள்ளை

திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி பகுதியில் பரஞ்சோதி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது 45). தொழிலதிபரான இவர் திருச்சியில் ஹார்டுவேர்ஸ் மற்றும் பிளாஸ்டிக் குழாய் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ணகுமார் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி தீபா(40) மற்றும் பிள்ளைகளுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார்.

நேற்று அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த தங்க சங்கிலி, தோடு மற்றும் வளையல்கள் உள்பட 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கிருஷ்ணகுமார் கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆள் இல்லாததை அறிந்து, நேற்று முன்தினம் இரவு கொள்ளை சம்பவத்தை அறங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ேமலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் வீட்டை மோப்பம் பிடித்தபடி சென்று ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்